மணக்குள விநாயகர் கல்லுாரியில் முதலாமாண்டு துவக்க விழா
புதுச்சேரி: மதகடிப்பட்டு, மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடந்தது. மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கி, மாணவர்கள் எவ்வாறு தங்கள் திறமைகளை வளர்த்து கொண்டு வாழ்வில் சிறந்த சாதனையாளர்களாக, தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும் என எடுத்துரைத்தார். பொருளாளர் ராஜராஜன், இணைச்செயலாளர் வேலாயுதம் வாழ்த்தி பேசினர். கல்லுாரியின் முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார். விழாவில், கலெக்டர் குலோத்துங்கன் பங்கேற்று பேசுகையில், மாணவர்கள் வாய்ப்புகளை உருவாக்கி கொண்டு முன்னேற வேண்டும். எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்த தொழில் முனைவோராக உருவாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பொருளாதார உதவித்தொகை மற்றும் வழிகாட்டுதலை வழங்கி வருவது குறித்து பேசினார். கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி, கலை மற்றும் அறிவியல் துறை சார்ந்த படிப்புகளை மாணவர்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் சிறந்த நிலைக்கு செல்ல வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். விழாவில், பல்வேறு கல்லுாரிகளின் முதல்வர்கள், புலமுதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு முதலாமாண்டு மாணவர்களை வரவேற்று வாழ்த்தினர். கல்லுாரியின் இயற்பியல் துறைத்தலைவர் ஜெயவர்தனன் நன்றி கூறினார்.