உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சட்ட விரோத பேனர்களை அகற்ற சென்ற அதிகாகளுக்கு.. அடி.. உதை...:அழகானந்தம் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள்-ரவுடி கும்பல் அராஜகம்; கவர்னர் - மாவட்ட கலெக்டர் என்ன செய்ய போகின்றனர்..

சட்ட விரோத பேனர்களை அகற்ற சென்ற அதிகாகளுக்கு.. அடி.. உதை...:அழகானந்தம் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள்-ரவுடி கும்பல் அராஜகம்; கவர்னர் - மாவட்ட கலெக்டர் என்ன செய்ய போகின்றனர்..

புதுச்சேரி: சட்ட விரோத பேனர்களை அகற்ற சென்ற பொதுப்பணித் துறை அதிகாரிகளை அழகானந்தம் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் - ரவுடி கும்பல் அடித்து உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது கடும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளையொட்டி, அவரது ஆதரவாளர்கள் நகரம் முழுதும் சட்ட விரோத பேனர்களை வைத்துள்ளனர். இதேபோல், கதிர்காமம் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., அழகானந்தம் அலுவலக திறப்பு விழாவையொட்டியும், சட்ட விரோத பேனர்கள் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ளன. உச்சக்கட்ட கொடுமையாக கலெக்டர் அலுவலகம் அருகே வழுதாவூர் சாலையில் போக்குவரத்திற்கு இடையூராக அலங்கார வளைவு வைக்கப்பட்டுள்ளது. அதுவும், சாலையின் நடுவே பள்ளம் தோண்டி எந்த அனுமதியும் இல்லாமல் இந்த அலங்கார வளைவு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கலெக்டர் குலோத்துங்கனுக்கு புகார் சென்ற நிலையில், பொதுப்பணித் துறை மத்திய கோட்ட செயற்பொறியாளரும், வழுதாவூர் சாலையின் எஸ்டேட் அதிகாரியுமான சீனிவாசன், உதவி பொறியாளர் பாலாஜி தலைமையிலான அதிகாரிகள் மதியம் 1:30 மணியளவில் போக்குவரத்திற்கு இடையூராக உள்ள பேனர்களை அகற்ற வந்தனர். இதனை கண்டதும் அழகானந்தம் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் - ரவுடி கும்பல் ஆவேசமடைந்தது. பொதுப்பணித் துறை அதிகாரிகள் சீனிவாசன், உதவி பொறியாளர் பாலாஜி உள்ளிட்ட ஊழியர்களை சூழ்ந்து கொண்டு அடித்து உதைத்தது. அவர்களின் மொபைல் போன்களை பிடுங்கி எறிந்தது. நெஞ்சிலேயே எட்டி உதைத்தது. இதற்குமேல், எங்களுடைய பேனர்களை அகற்ற பார்த்ததால் நடப்பதே வேறு. தொலைத்துவிடுவோம் என்று பொதுப்பணித்து அதிகாரிகளை பார்த்து கொலை மிரட்டல் விடுத்தப்படி போலீஸ் பாதுகாப்புடன் கலைந்து சென்றது. ரவுடி கும்பலால் அடித்து துவைக்கப்பட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் உயிர் பிழைத்தால் போதும் என்று அங்கிருந்து தப்பித்தனர். பின் படுகாயமடைந்த அதிகாரிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். உயிருக்கு பயந்து போலீசில் புகார் கொடுக்கவில்லை. சட்ட விரோத பேனர்களை சாலையில் வைப்பதே தவறு. அதிலும் சட்ட விரோத பேனர்களை அனுமதி இல்லாமல் வைத்துவிட்டு அதனை அகற்றவந்த அதிகாரிகளை அழகானந்தம் ஆதரவாளர்கள், ரவுடி கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த அதிகாரிகளும் நம்பிக்கை இழந்துபோய் உள்ளனர். அடுத்த கட்டமாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். அரசு அதிகாரிகள் தாக்கப்பட்ட விஷயத்தில் அரசு சும்மா வேடிக்கை பார்க்கக் கூடாது. இன்றைக்கு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம் உத்தரவின்படி, சட்ட விரோத பேனர்களை அகற்ற சென்ற கீழ்நிலை அதிகாரிகள் தான் தாக்கப்பட்டுள்ளனர். அப்படியே விட்டால் அடுத்து உத்தரவு போட்ட உயர் அதிகாரிகளையும் இந்த கும்பல் தாக்கும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை. சட்ட விரோதமாக எத்தனை பேனர்களையும் சாலைகளில் வைப்போம். உங்களால் ஒன்றை கூட பிடுங்க முடியாது என்று ரவுடி கும்பல் நேரடியாகவே அரசு நிர்வாகத்திற்கும் அதிகாரிகளை அடித்து உடைத்து சவால் விட்டுள்ளது. கவர்னர் கைலாஷ்நாதனும், மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனும் என்ன செய்ய போகின்றனர். பாக்ஸ்.: முதல்வர் ரங்கசாமிக்கு தெரியுமா? நான் முதல்வரின் தீவிர ஆதாரவாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அழகானந்தம் எம்.எல்.ஏ., அவரது ஆதாரவாளர்கள், குண்டர்கள் தொடர்ந்து சட்ட விரோத பேனர்களை வைத்து முதல்வர் ரங்கசாமி கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகின்றனர். இது முதல்வர் ரங்கசாமிக்கு தெரியுமா? இன்னும் என்ன ஆகபோகுதோ....: பதவியேற்ற இரண்டு மாதங்களிலே சுயேச்சை எம்.எல்.ஏ., அழகானந்தம் ஆதரவாளர்கள் அரசு அதிகாரிகளை தாறுமாறாக அடித்து உதைத்து ரணகளம் படுத்தி உள்ளனர். அடிப்பட்ட அதிகாரி போலீசில் புகார் கொடுக்க தங்கள் மேலிட அதிகாரிகளின் உத்தரவுக்காக அவமானத்துடன் காத்திருக்கிறார். இரண்டு மாதத்திலேயே இவ்வளவு அடிதடியில் ஈடுபடும் அழகானந்தம் ஆதரவாளர்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளில் யார், யாரை அடிக்கப்போகிறார்களோ என்ற அச்சம் தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஏற்பட்டு விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ