போக்குவரத்து நெரிசலை சரி செய்ய சபாநாயகர் அதிகாரிகளுடன் ஆலோசனை
புதுச்சேரி: உப்பளம் தொகுதி அம்பேத்கர் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்வது தொடர்பாக, தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், நகராட்சி ஆணையர் ஹரிபிரசாத், போக்குவரத்து எஸ்.பி., பக்தவச்சலம், நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், வருவாய் அதிகாரி பிரபாகரன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், வெங்கடாஜலபதி, ஜெய்சங்கர், இனியன், வேலையன் மற்றும் துறைமுகத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கடலுார் சாலை ரோடியர்பேட்டில் நடந்து வரும் ரயில்வே மேம்பாலம் கட்டும் இடத்தில் பைக் மற்றும் கார்கள், ஆட்டோ செல்வதற்காக பாதை அமைக்க வேண்டும். துறைமுக மைதானத்தில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கொடுக்கம்போது, நிகழ்ச்சி நடக்கும் நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க மாற்று வழியை ஏற்பாடு செய்ய வேண்டும். அப்பகுதியில் உள்ள பெத்தி செமினர், அமலோற்பவம், இமாகுலேட் ஆகிய பள்ளிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அம்பேத்கர் சாலை, சுப்பையா சாலைகளில் நீண்ட நேரம் நிறுத்தப்படும் வாகனங்கள், நடைபாதையில் உள்ள தற்காலிக கடைகளை முறைப்படுத்த வேண்டும் என சபாநாயகர் அன்பழகன் அறிவுறுத்தினார். இதையடுத்து, அம்பேத்கர் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உடனடியாக மாற்று பாதை ஏற்பாடு செய்யப்படும் என, துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.