உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுவையில் பீர் பாட்டிலால் குத்தி ரவுடி உட்பட 2 பேர் கொலை

புதுவையில் பீர் பாட்டிலால் குத்தி ரவுடி உட்பட 2 பேர் கொலை

புதுச்சேரி:புதுச்சேரியில் ஒரே நாளில் இரு வேறு இடங்களில் ரவுடி உட்பட இரண்டு பேர் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டனர். புதுச்சேரி, லாஸ்பேட்டை கொல்லிமேடு மைதானத்தில், நேற்று காலை வாலிபர் ஒருவர், தலை மற்றும் மார்பில் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். ஆத்திரம் லாஸ்பேட்டை போலீஸ் விசாரணையில், இறந்தவர், கருவடிக்குப்பம், சண்முகா நகர் பிரதாப், 26, என்பது தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு, ரவுடிகளான பிரதாப், வினோத், பழனிமுருகன் ஆகிய மூவரும், லாஸ்பேட்டை கொல்லிமேடு மைதானத்தில் மது குடித்தனர். அப்போது, பிரதாப், பழனிமுருகனின் காதலியை தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த பழனிமுருகன் பீர் பாட்டிலை உடைத்து, பிரதாப் மார்பில் குத்தி கொலை செய்தது தெரிந்தது. போலீசார், பழனிமுருகன், வினோத்தை பிடித்து விசாரிக்கின்றனர். மற்றொரு சம்பவம் திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் அருகே பெருமாள் நகர் செல்லும் சாலையோரத்தில், நேற்று காலை, 9:00 மணி அளவில் வாலிபர் ஒருவர் கழுத்தில் பீர் பாட்டிலால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். போலீஸ் விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், வெட்டுக்காட்டை சேர்ந்த ஆகாஷ், 25, என, தெரிந்தது. அவரை கொலை செய்தது யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ