கடலில் 3 பேர் இறந்த சம்பவம்: ஈடன் பீச் நிர்வாகம் மீது வழக்கு
அரியாங்குப்பம்: கடல் அலையில் சிக்கி கர்நாடகாவை சேர்ந்த பெண் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஈடன் பீச் நிர்வாகத்தின் மீது, போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து 12 பேர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள், நேற்று முன்தினம் அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினம் ஈடன் பீச்சிற்கு வந்து கடலில் குளித்தனர். அதில் 5 பேரை, ராட்ச அலை இழுத்து சென்றது. இதில், பெங்களூரு ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்த, கர்நாடாக மாநிலத்தை சேர்ந்த மேகா, 29, பிர்ஜ்வால்மேதி, 23, ஆந்திரா, விஜயவாடாவை சேர்ந்த பவன்குமார், 25, ஆகிய மூவரும் உயிரிழந்தனர். அதில், உயிர் பிழைத்த, குஜராத்தை சேர்ந்த அதித்தி, 23, பெங்களூருவில் உள்ள சிக்மங்ளூர் பகுதியை சேர்ந்த ஜீவன், 25, இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று,ஊருக்கு சென்றனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஈடன் பீச்சிற்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகளை,அனுமதி வழக்கப்பட்ட நேரத்திற்கு முன் கூட்டியே அனுமதித்ததாலும், அந்த நேரத்தில் லைப் கார்டு இல்லாமல் இருந்ததால், உயிரிழந்த 3 பேரை காப்பாற்ற முடியாமல் போனது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அலட்சியமாகவும், பாதுகாப்பு இல்லாமல் சுற்றுலா பயணிகளை அனுமதித்த, ஈடன் பீச் நிர்வாகத்தின் மீது, 106(1) பிரிவின் கீழ் அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகிறார்.