வாடகை பைக்குகள் நிறுத்தப்பட்ட குடோனில் நள்ளிரவில் தீ விபத்து; பெட்ரோல் திருட வந்த ஆசாமி சிகரெட் பிடித்ததால் விபரீதம்
புதுச்சேரி : புதுச்சேரியில் வாடகை பைக்குகள் நிறுத்தப்பட்ட குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பைக்குகள் எரிந்து நாசமானது. நள்ளிரவில் பெட்ரோல் திருட வந்த ஆசாமி, சிகரெட் பிடித்ததால், தீ விபத்து ஏற்பட்டு, அவரும் காயமடைந்தார்.வாழைக்குளம் நகராட்சி குடியிருப்பை சேர்ந்தவர் மணிவண்ணன், 34; புதுச்சேரி பட்டேல் சாலை - செஞ்சி ரோடு சந்திப்பில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வரும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளுக்கு இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விட்டு வருகிறார்.இதற்காக கேண்டின் வீதியில் உள்ள மனோன்மணி அம்மன் கோவில் பின்புறம் குடோனில் 12 இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தார். நள்ளிரவு 2:00 மணிக்கு, குடோன் எரிவதாக புதுச்சேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை அணைத்தனர்.அப்போது, குடோனுக்குள் ஒருவர் தீக்காயங்களுடன் கிடந்துள்ளார். அவரை பெரியக்கடை போலீசார் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிளாட்பாரத்தில் வசிக்கும் தாசின் மகன் சுரேஷ், 26, என்பதும், சாலையோரங்களில் நிற்கும் பைக்குகளில் இருந்து பெட்ரோல் திருடும் அவர், நேற்று முன்தினம் நள்ளிரவு மணிவண்ணன் வாகனம் நிறுத்தி வைத்திருந்த குடோனுக்கு சென்றுள்ளார்.அங்கு பெட்ரோல் திருடிய அவர், சிகரெட் பிடித்துள்ளார். பெட்ரோல் மீது நெருப்பு பட்டு, குடோன் தீப்பிடித்தது தெரிய வந்தது. இந்த தீ விபத்தில் குடோனுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 பைக்குகளும் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவம் குறித்து சுரேஷ் மீது பெரியக்கடை சப் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.