ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முற்றுகை: கதவை பூட்டியதால் பரபரப்பு
புதுச்சேரி: பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலைக்கு பதிலா பணம் வழங்க கோரி வி.சி., கட்சி சார்பில் ஆதிதிராவிடர் நலத்துறை முற்றுகை போராட்டம் நடந்தது.புதுச்சேரி ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கடந்த 2017 ம் ஆண்டு முதல் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலைக்கு பதிலாக, ஒவ்வொரு ஆதிதிராவிடர், பழங்குடியின நபருக்கும் தலா ரூ. 1000 வீதம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.இந்தாண்டு பணத்திற்கு பதிலாக தரமான இலவச வேட்டி சேலை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் இந்த முடிவை கைவிட்டு பணமாக வழங்க வலியுறுத்தி வி.சி., கட்சி சார்பில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி முதன்மை செயலர் தேவபொழிலன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டக்காரர்கள் திடீரென அலுவலக கதவை இழுத்து மூடி பூட்டு போட்டனர். போலீசார் பூட்டை கழற்றி கதவை திறந்தனர்.போலீசார் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம்ஓய்ந்தது.