ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: கலாசார சீரழிவை ஏற்படுத்தும் ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி அ.தி.மு.க., சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், ராஜாராமன், கோமளா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், கலாசார சீரழிவை ஏற்படுத்தும் ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தியும், பார்களில் நடைபெறும் சட்ட விரோத செயல்களை கண்டு கொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். பின், அனைவரும், கலெக்டர் அலுவலகத்தில் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் கோரிகார்டு வைத்து தடுத்ததால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் 4 பேர் மட்டும் உள்ளே சென்று கோரிக்கை மனு வழங்கிவிட்டு கலைந்து சென்றனர். மனுவில் கூறியிருப்பதாவது: மா நிலத்தில் இயங்கி வரும் 200க்கும் மேற்பட்ட ரெஸ்டோ பார்கள் விதிகளை மீறி அதிகாலை 4:00 மணி வரை செயல்படுகின்றன. எவ்வித அனுமதியின்றி ஆட்சியாளர்கள் மற்றும் போலீஸ் ஆதரவோடு, ஆட்டம், பாட்டம், மியூசிக்கல் டான்ஸ், டி.ஜே. நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அனு மதி பெறாமல் ஆட்டம், பாட்டம், மியூசிக்கல் டான்ஸ் நடத்தப்படும் ரெஸ்டோ பார்களில், மதுபானம் விற்பனை உரிமத்தை கலால் துறை ரத்து செய்திட வேண்டும். மேலும், இந்த விஷயத்தில் கடமையை செய்ய தவறிய, போலீஸ், கலால், உள்ளாட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.