தோட்டக்கலை விவசாயிகளிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரி : தோட்டக்கலை விவசாயிகளிடம் இருந்து, 2025ம் ஆண்டு ஆடிப்பட்டத்தில் பயிரிடப்பட்ட காய்கறிகள் சாகுபடிக்கு பிந்தைய மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குனர்(தோட்டக்கலை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; புதுச்சேரி கூடுதல் வேளாண் இயக்குனர் (தோட்டக்கலை) அலுவலகம் மூலம் 2025ம் ஆண்டு ஆடிப்பட்டத்தில் பயிரிடப்பட்ட பல வகை மரங்கள், வாழை, பூக்கள், மரவள்ளி, நெகிழி மூடாக்கு மற்றும் காய்கறிகளுக்கு 'சாகுபடிக்கு பிந்தைய மானியம்' பெறுவதற்கான விண்ணப்பங்கள் தோட்டக்கலை விவசாயிகளிடமிருந்து வரவேற்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்களை விவசாயிகள் தங்கள் பகுதிக்குட்பட்ட உழவர் உதவியகத்தில் வரும் 22ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். மேலும், விண்ணப்பங்களை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையதள வாயிலாகவும் (https;//agri.py.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தங்கள் பகுதிக்குட்பட்ட உழவர் உதவியகத்திலோ அல்லது புதுச்சேரி தோட்டக்கலை அலுவலகத்திலோ வரும் ஆக., 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.