சிலம்பம் போட்டியில் ஆரோவில் பள்ளி சாம்பியன்
புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த சிலம்பம் போட்டியில், ஆரோவில் இசை அம்பலம் பள்ளி மாணவர்கள் சாம்பியன் வென்றனர். புதுச்சேரி சிலம்பம் மற்றும் அடிமுறை சங்கம் சார்பில், 5ம் ஆண்டு மாநில சிலம்ப போட்டி, பாகூர் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆரோவில் அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் இசை அம்பலம் பள்ளி மாணவர்கள் முதலிடத்தை பிடித்து, சாம்பியன் வென்றனர். மாணவர் கணேஷ் வெள்ளி; மாணவி யோக இதயஸ்ரீ, மாணவர் தர்மேஷ் ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்றனர். வெ ற்றி பெற்றவர்களுக்கு, புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நலச்சங்க தலைவர் கராத்தே வளவன் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். போட்டியை கரிகால சோழன் தற்காப்புக்கலை கூட நிறுவனர் அன்புநிலவன் ஒருங்கிணைத்தார். தேசிய அளவிலான சிலம்ப போட்டிக்கு தகுதி பெற்ற வீரர்களை, இசை அம்பலம் பள்ளி தாளாளர் சஞ்சீவ் ரங்கநாதன், ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி ஆகியோர் பாராட்டி ஊக்குவித்தனர். பயிற்சியாளர் ஹரிஹரன் உள்ளிட்டோர் உடனிருந்தார்.