புதுச்சேரிக்கு மூலதன முதலீட்டு கடனாக ரூ.400 கோடி தேவை!மத்திய அரசிடம் விரிவான அறிக்கை சமர்பிப்பு
புதுச்சேரி: மாநில வளர்ச்சிக்காக, ரூ.400 கோடி கடனாக வழங்க வேண்டும் என புதுச்சேரி அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த விரிவான திட்ட அறிக்கையையும் அரசு சமர்ப்பித்துள்ளது. மத்திய அரசு, மூலதன முதலீட்டு கடன் திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் மாநிலங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், 50 ஆண்டு கால வட்டியில்லா நீண்ட கால கடனாக நிதியை வழங்கி வருகிறது. குறிப்பாக, சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம், மின்சாரம், சாலைகள் மற்றும் பாலங்கள் போன்ற மாநில அளவிலான அடிப்படைத் தேவைகளை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இந்த நிதியைப் பெற மாநில அரசுகள் தங்களின் சொந்த மூலதனச் செலவினங்களை உயர்த்துவதுடன், மத்திய அரசு குறிப்பிடும் சில குறிப்பிட்ட நிர்வாகச் சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இத்திட்டம் 2020-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டபோதும், யூனியன் பிரதேசமாக இருந்ததால் புதுச்சேரி இதில் சேர்க்கப்படவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, கடந்த 2025-26 நிதியாண்டில் தான் புதுச்சேரி இத்திட்டத்தில் இணைக்கப்பட்டது. முதல் ஆண்டில் மத்திய அரசு வழங்கிய ரூ.291.50 கோடி நிதியைக் கொண்டு, மாநிலத்தில் 40 வகையான முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டன. கூடுதல் நிதி...: விரைவில், புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள சூழலில், இரண்டாம் நிதியாண்டின் மூலதன முதலீட்டு கடனுக்காக மத்திய அரசினை புதுச்சேரி அரசு அணுகியுள்ளது. மாநிலத்தில் நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து முடிக்கவும், புதிய உள்கட்டமைப்பு பணிகளைத் தொடங்கவும் கூடுதல் நிதி தேவைப்படுகிறது. எனவே, இந்த ஆண்டிற்கான ஒதுக்கீட்டை ரூ.400 கோடியாக உயர்த்தித் தர வேண்டும் என்று புதுச்சேரி அரசு மத்திய அரசிடம் வலுவாக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக திட்ட அறிக்கைகளும் விரிவாக மத்திய அரசுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளன. வட்டியில்லாமல்...: தற்போது புதுச்சேரியின் ஒட்டுமொத்த கடன் சுமை ரூ.11,867.38 கோடியாக உள்ளது. இதில், ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் வெளிச்சந்தையில் பெறப்பட்ட கடன் மட்டும் ரூ.10,083.86 கோடியாகும். இதில் மத்திய அரசு வழங்கிய ரூ.291.50 கோடி மூலதனக் கடனானது, ஒட்டுமொத்த கடனில் வெறும் 2.45 சதவீதம் மட்டுமே. இக்கடன் 50 ஆண்டுகள் கழித்தே திருப்பிச் செலுத்த வேண்டிய வட்டியில்லா கடன் என்பதால், இதனால் அரசுக்கு உடனடி நிதிச் சுமையோ அல்லது வட்டிப் பிரச்னையோ ஏற்படாது. இதனால் தான், மூலதன முதலீட்டு கடன் புதுச்சேரிக்கு மிகவும் அவசியமாக தேவையாகிறது. அடுத்தகட்ட நடவடிக்கை: இந்தக் கோரிக்கையை மத்திய அரசிடம் நேரடியாக வலியுறுத்த முதல்வர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளார். விரைவில் புதுச்சேரி வரவுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், இத்திட்டத்தின் அவசியம் குறித்து நேரில் விளக்கி, நிதி ஒதுக்கீட்டை உயர்த்தித் தருமாறு முதல்வர் வலியுறுத்த உள்ளார். மத்திய அரசின் இந்த நிதியுதவி புதுச்சேரியின் உள்கட்டமைப்புத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.