உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நவோதயா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

 நவோதயா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி: காலாப்பட்டு நவோதயா பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். புதுச்சேரி கவர்னர் மாளிகை, டி.ஜி.பி., அலுவலகம், தலைமைச் செயலகம், கலெக்டர் அலுவலகம், ஜிப்மர், தனியார் ஓட்டல்கள் உள்ளிட்டவைகளுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு துாதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காலாப்பட்டு ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி இ- மெயில் ஐ.டி.,க்கு, நேற்று காலை 9:00 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்திருந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், உடனடியாக காலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் தனசெல்வம், காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தீயணைப்பு துறை, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, பள்ளியின் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. காலை 10:30 முதல் 1:15 மணி வரை நடந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது. சோதனையின் போது, மாணவர்கள் அனைவரும், பள்ளியின் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். வரும் 1ம் தேதி பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வரும் நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் குறித்து காலாப்பட்டு மற்றும் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி