துாக்கு போடும் போராட்டம் சமூக ஆர்வலர் மீது வழக்கு
புதுச்சேரி : பேனர்களை அகற்ற வலியுறுத்தி, துாக்கு போடும் போராட்டம் நடத்திய, சமூக ஆர்வலர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். புதுச்சேரியில் சாலைகளில் பேனர்கள் வைக்கப்படுவதால், போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்பட்டு வருகிறது. அனுமதியில்லாமல் பேனர்கள் வைப்பவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், பேனர் வைக்க தடை சட்டம் இருந்தும் நகராட்சியினரிடம் அனுமதி பெறாமல், திருமண விழா, பிறந்த நாள், கோவில் விழா என சாலையில் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதனால், போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சாலையில் வைக்கப்படும் பேனர்களை நகராட்சியினர் உடனடியாக அகற்ற வேண்டும் என, புதுச்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் சுத்தம் சுந்தராஜன், என்பவர் உழவர்கரை நாகராட்சி முன்பு, நேற்று, கயிறுடன் வந்து, துாக்கு போடும் போராட்டம் நடத்தினார். அவரிடம் ரெட்டியார்பாளையம் போலீசார், பேச்சு வார்த்தை நடத்தினர். அவர் அங்கிருந்து செல்லாமல், அடம் பிடித்ததால், போலீசார் அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று, அவர் மீது 170 பிரிவின் கீழ் வழக்குப் பதிந்தனர்.