உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., சீட் பெற போலி ஆவணம் சமர்ப்பித்த வழக்கு

என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., சீட் பெற போலி ஆவணம் சமர்ப்பித்த வழக்கு

புதுச்சேரி : எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் சீட் பெற போலி துாதரக ஆவணங்கள் கொடுத்த வழக்கில், மரக்காணத்தைச் சேர்ந்த ஏஜன்ட்டை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி அரசு மருத்துவ கல்லுாரி, 3 சுயநிதி மருத்துவ கல்லுாரி எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.,) மற்றும் என்.ஆர்.ஐ., ஸ்பான்சர் பிரிவில் 15 சதவீத அடிப்படையில் 116 எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.இதில், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் நேரடி உறவினர்களின் மகன், மகள்கள் ஸ்பான்சர் ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை பெற்று படிக்கலாம். குறைவான நீட் மதிப்பெண் பெற்ற பல மாணவர்கள், ஏஜன்டுகள் மூலம் போலியான துாதரக கடிதம் பெற்று, என்.ஆர்.ஐ., ஸ்பான்சர் ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களை பெற்று வந்தனர். இதனை கண்டுபிடித்த சென்டாக் நிர்வாகம், என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் சீட் பெற்ற மாணவர்களின் மொத்த சான்றிதழ்களை ஆய்வு செய்தது. இதில், 75 மாணவர்கள் போலி துாதரக ஆவணம் சமர்ப்பித்தது தெரியவந்தது. லாஸ்பேட்டை போலீசார் 75 மாணவர்கள் மீதும் மோசடி வழக்கு பதிந்து, 20 மாணவர்களை வரவழைத்து விசாரித்தனர்.இதில் மரக்காணம் முறுக்கேரியைச் சேர்ந்த ஏஜன்ட் ஒருவரை லாஸ்பேட்டை போலீசார் நேற்று பிடித்தனர். விசாரணையில் அவர், சென்னையில் இன்டர்நெட் சென்டர் நடத்தி வருகிறார். தனியார் பள்ளியில் கம்யூட்டர் பயிற்சி அளித்து கொண்டு, என்.ஆர்.ஐ., இடங்களை பெற போலி ஆவணங்கள் தயாரிக்க உதவியதும் தெரியவந்தது. ஏஜன்டின் தலைமையாக செயல்பட்ட நபர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி