சகோதரர்களை தாக்கிய 5 பேர் மீது வழக்கு பதிவு
பாகூர்: பாகூர், வண்ணாரபேட்டையை சேர்ந்தவர் கார்த்தி, 25. காந்தி நகரை சேர்ந்தவர் மகாராஜன், 24. திருப்பணாம்பாக்கத்தை சேர்ந்தவர் பூபதி. மூவரும் கடந்த 30ம் தேதி பாகூர் சித்தேரி தாங்கல் பகுதியில் மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவ்வழியாக சென்ற மகாராஜனின் அண்ணன் பரணிசந்தர், 28, அவர்களை சமாதானம் செய்து அனுப்பினார்.அன்று இரவு பாகூர் கால்நடை மருத்துவமனை அருகே தனது நண்பர்களுடன் மகாராஜன் இருந்தார். அப்போது பூபதியின் நண்பர் குருவிநத்தம் கார்த்தி தனது கூட்டாளிகளுடன் சென்று, மகாராஜனிடம் உனது நண்பர் கார்த்தி எங்கே என கேட்டு கையில் வைத்திருந்த இரும்பு பைப்பால் தாக்கினர்.தகவலறிந்த மகாராஜனின் அண்ணன் பரணிசந்தர் தனது நண்பர்களுடன், கார்த்தியை தட்டிக் கேட்பதற்காக குருவிநத்தம் சென்றார்.அங்கிருந்த பூபதி, ராஜேஷ், ஸ்ரீதர், தனுஷ், கார்த்தி ஆகியோர் கத்தி, தடி உள்ளிட்ட ஆயுதங்களால் பரணிசந்தர், அவரது தம்பி மகாராஜன் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தினர்.காயமடைந்த மகாராஜன் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகிறார். பரணிசந்தர் உள்ளிட்டோர் லேசான காயமடைந்தனர். பரணிசந்தர் புகாரின் பேரில் பாகூர் போலீசார், குருவிநத்தம் பகுதியை சேர்ந்த ராஜேஷ், கார்த்தி, ஸ்ரீதர், தனுஷ் பூபதி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.