இன்சூரன்ஸ் காப்பீடு மோசடி சென்னை ஏஜென்ட் கைது
புதுச்சேரி: விபத்து இழப்பீடு பெற போலி இன்சூரன்ஸ் காப்பீடு தயார் செய்த சென்னையை சேர்ந்த ஏஜென்டை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் புதுநகரை சேர்ந்தவர் பார்த்தசாரதி, 23. இவர், கடந்த 2021ம் ஆண்டு பிப்., 1ம் தேதி தனது உறவினர் மகளுடன் பல்சர் பைக்கில், டி.என்.பாளையம் - அபிேஷகப்பாக்கம் வழியாக வந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் பள்ளி வாகனம் பைக் மீது மோதியது. அதில், பார்த்தசாரதி, அவருடன் வந்த ஏழுமலை மகள் ராகவர்தினி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த ராகவர்தினியின் தந்தை 90 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே, வழக்கில் தாக்கல் செய்த தனியார் பள்ளி வாகனத்தின் காப்பீடு ஆவணத்தை ஆய்வு செய்ததில், போலியானது என தெரியவந்தது. இதையடுத்து, அந்நிறுவன இணை மேலாளர் ஷிம் சுந்தர், புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி., போலீசில் அளித்த புகாரில் பேரில், இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், சென்னை, பெரும்பாக்கத்தை சேர்ந்த இன்சூரன்ஸ் ஏஜென்ட் அழகர்ராஜா,43; என்பவர் பள்ளி நிறுவனத்தில் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு, இன்சூரன்ஸ் காப்பீடு போடாமல், விபத்து ஏற்பட்டபின் மறுநாள் அந்த வாகனத்திற்கு இன்சூரன்ஸ் காப்பீடு செய்து, அதில் உள்ள தேதியை மாற்றம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலி இன்சூரன்ஸ் காப்பீடு தயாரித்த அழகர்ராஜாவை போலீசார் கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.