முத்தியால்பேட்டையில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பு: இலவச குடிநீர் வழங்க முதல்வர் உத்தரவு
புதுச்சேரி: குடிநீருடன் கழிவு நீர் கலந்த சம்பவத்தை தொடர்ந்து, முத்தியால்பேட்டை பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார். முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் கடந்த 8 நாட்களாக குடிநீரில் துர்நாற்றம் வீசுகிறது. குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எந்த இடத்தில் குடிநீருடன் கழிவு நீர் கலக்கிறது என்பதே பொதுப்பணித் துறை பாயிண்ட்டுகளை உடைத்து ஆராய்ந்து வருகிறது. ஆனாலும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கிடையில் சோலை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் நேற்று சந்துரு தலைமையில் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து முறையிட்டனர். துர்நாற்றம் வீசும் குடிநீர் குறித்து சராமரியாக புகார் தெரிவித்தனர். சுகாதார குடிநீர் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் வரை மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என, வலியுறுத்தினர். அதனை கேட்ட முதல்வர் ரங்கசாமி உடனடியாக பொதுப்பணித் துறையினரை அழைத்து சோலை நகர் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க உத்தரவிட்டார். தொடர்ந்து இரண்டு டிராக்டர்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் முத்தியால்பேட்டை தொகுதியில் மூன்று இடங்களில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோக மையங்களில் 7 ரூபாய் பதிலாக இலவச குடிநீர் பெற்றுக்கொள்ளவும் முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். எனவே பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தங்களது ரேஷன்கார்டினை காட்டி ஒரு கேன் இலவசமாக வாங்கி கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.