UPDATED : ஆக 23, 2026 06:34 PM | ADDED : ஆக 23, 2026 06:13 PM
புதுச்சேரி: மூன்று நாட்கள் நடந்த ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு நேற்றுடன் முடிந்தது. புதுச்சேரி அரசு பல்வேறு காலிபணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம், நிரப்பி வருகிறது. இந்நிலையில், புள்ளியியல் ஆய்வாளர், நுாலக மற்றும் தகவல் உதவியாளர், கள மேற்பார்வையாளர், வேளாண்மை அலுவலர், தொழில்நுட்ப அலுவலர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்கு 39 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதியானவர்களுக்கு புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் என 112 மையங்களில், கடந்த 21ம் தேதி முதல் நேற்று வரை மூன்று நாட்களுக்கு ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு துவங்கி கடந்த இரு நாட்களாக காலை, மாலை என தேர்வு நடந்தது வந்தது. நேற்று காலை அனைத்து தேர்வர்களுக்கும் முதல் தாள் தேர்வு நடந்தது. தொடர்ந்து நேற்று மதியம 2.30 மணி முதல் 4.30 மணி வரை யு.டி.சி., பணிக்கு இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. இத்தேர்வில், விண்ணப்பதாரர்கள் சுமார் 19 ஆயிரம் பேர் ஆப்சென்ட் ஆகிஇருந்தனர். போலீஸ் பாதுகாப்பு ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்விற்கு கேள்வித் தாள் தலைமை செயலகத்தில், வைக்கப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டடிருந்தது. தலைமை செயலகத்தை சுற்றியுள்ள தெருக்களில் பேரிகார்டுகள் போடப்பட்டு வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது.