பணி நிரந்தரம் செய்ய கோரி ஒப்பந்த ஆசிரியர்கள் தர்ணா
புதுச்சேரி: பணிநிரந்தரம் செய்ய கோரி ஒப்பந்த ஆசிரியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். பள்ளிகல்வித் துறையில் பணியாற்றும் 292 ஒப்பந்த ஆசிரியர்கள் மற்றும் பாலசேவிக்கா ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, நேற்று அண்ணா சிலை அருகில் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு, புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவதலைவர் சேஷாசலம் தலைமை தாங்கினார். புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர்பாலக்குமார் முன்னிலை வகித்தார். அமைச்சக ஊழியர்கள் சங்கம், பொதுப்பணி துறை ஊழியர் சங்கம், கொம்யூன் மற்றும் நகராட்சி ஊழியர் சங்கம், அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் சங்கம் மற்றும் பல துறை சார்ந்த சங்கங்களின் பிரதிநிதிகள், அரசு பள்ளி ஆசிரியர்கள், அமைச்சக ஊழியர்கள், வனத்துறை ஊழியர்கள், ஓட்டுனர் சங்க ஊழியர்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள் மற்றும் பல்வேறு துறை ஊழியர்கள் என, 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.