கெஸ்ட் ஹவுசில் தங்கியிருந்த மாற்றுத்திறனாளி மர்ம சாவு
பாகூர் : கெஸ்ட் ஹவுசில் தங்கியிருந்த மாற்றுத்திறனாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி காந்தி நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்,45; பேச்சு, காது குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி. இவர், கடந்த 24ம் தேதி இரவு 10:00 மணிக்கு, புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுசில் ரூம் புக் செய்துள்ளார். அன்று இரவு சென்னை, பெரம்பூர், நம்வாழ்பேட்டையை சேர்ந்த அவரது நண்பர் மாற்றுத்திறனாளி மோகன்,45; உள்ளிட்ட இரண்டு பேருடன் ரூமில் தங்கினார். மறுநாள் 25ம் தேதி காலை 11:00 மணிக்கு சதிஷ்குமார் மற்றும் மோகனின் நண்பரும் வௌியே சென்றனர். மோகன் மட்டும் ரூமில் தங்கியிருந்தார்.புக்கிங் டைம் முடிந்து விட்டதால், ரூமை காலி செய்திட, கெஸ்ட் ஹவுஸ் மேலாளர் ராஜ்மோகன், சதிஷ்குமாரை மொபைல் போனில் தொடர்பு கொண்டார். ஆனால், அவர் போனை எடுக்காததால், சந்தேகமடைந்த அவர் இரவு 11:00 மணிக்கு ரூமிற்கு சென்று பார்த்த போது, மோகன் கட்டிலில் கவிழ்ந்த நிலையில் வாந்தி எடுத்து மயங்கி கிடந்தார்.உடன் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.இதுகுறித்து கெஸ்ட் ஹவுஸ் மேலாளர் ராஜ்மோகன் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் விஜயக்குமார், பூபாலன் ஆகியோர் வழக்கு பதிந்து, மோகன் குடி போதை காரணமாக இறந்தாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.