மேல்சாத்தமங்கலத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன் தி.மு.க., வேட்பாளர் ரங்கன் உறுதி
புதுச்சேரி: அடிப்படை வசதிகளை நிறைவேற்றி மங்கலம் தொகுதியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வேன் என, மங்கலம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் ரங்கன் பொதுமக்களிடையே வாக்குறுதி அளித்து ஓட்டு சேகரித்தார். மங்கலம் தொகுதியில் இண்டி கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் சிவராந்தகம் ரங்கன் நேற்று மேல் சாத்தமங்கலம் கிராமத்தில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் வீடு, வீடாக சென்று 'உதயசூரியன்' சின்னத்திற்கு ஓட்டு சேகரித்த ரங்கனிடம், கடந்த 5 ஆண்டுகள் அமைச்சர் தொகுதியாக இருந்தும், சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்துத்தரப்படவில்லை என மக்கள் புகார் அளித்தனர். மக்கள் கூறிய புகார்களை பொறுமையுடன் கேட்டறிந்த தி.மு.க., வேட்பாளர் ரங்கன், என்னை வெற்றிபெற செய்தால் குடிநீர், சாலை, தடையில்லா மின்சாரம், வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மங்கலம் தொகுதியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வேன் என, வாக்குறுதி அளித்து ஓட்டு சேகரித்தார். அப்போது, வேட்பாளரின் மகள் சத்யா, தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் முருகதாஸ், அவைத் தலைவர் புஷ்பா, நிர்வாகிகள் ஸ்ரீஹரி, முரளி, அய்யனார், கல்யாண், மேல்சாத்தமங்கலம் கிளைச் செயலாளர் அய்யப்பன் மற்றும் இண்டி கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.