புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தர தி.மு.க., கோரிக்கை
புதுச்சேரி : கண்டாக்டர் தோட்டம் பகுதியில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கோபால், குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர் அனில்குமாரிடம் மனு அளித்துள்ளார். மனுவில், உருளையன்பேட்டை தொகுதி, கண்டாக்டர் தோட்டம், பிரியதர்ஷினி நகரில், குடிசை மாற்று வாரியம் சார்பில், 2002ல் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி, அப்போதைய எம்.எல்.ஏ., சிவா வழங்கினார். அந்த கட்டட மேற்கூரை அடிக்கடி பெயர்ந்து விழுவதால், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கின்றனர். இதேபோல் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில், குமரகுரு பள்ளம் பகுதியில் கட்டப்பட்ட குடியிருப்பை இடித்துவிட்டு புதிதாக கட்டுப்பட்டு உள்ளது. இதற்கு ஒதுக்கிய பணம் முழுமையாக செலவிடப்படாததால் ஊழல் நடந்திருப்பதும் தெரிகிறது. இது குறித்து தனியாக விசாரணை நடத்த வேண்டும். சேதமடைந்த குடியிருப்பு கட்டடத்தை அகற்றி, அங்கு புதிய அடுக்குமாடி குடியிருப்பை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரையில் உயர்த்தப்பட்ட வரி வசூலை நிறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி செயலாளர் சக்திவேல், பொருளாளர் சசிகுமார், வர்த்தகர் அணி குரு, ஜெயப்ரகாஷ் இலக்கிய அணி தர்மன், சொல்தா ரவி, இளைஞர் அணி தாமரை, மாணவரணி ஸ்டிபன், விளையாட்டு அணி யோகேஷ், கிளை செயலாளர் பிரகாஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.