| ADDED : ஜன 28, 2024 01:09 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பூட்டிய வீட்டிற்குள் தவறி விழுந்ததால் எழ முடியாமல் இரண்டு நாட்களாக தவித்த வயதான தம்பதியை, போலீசார் கதவை உடைத்து உரிய நேரத்தில் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் டாக்டர் சதிஷசன், 84; சுகாதாரத்துறையில் துணை மருத்துவ கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி சைலஜா, 80; இவர்களது மகன் பைஜர், பெங்களூரில் பணியாற்றி வருகிறார். சதிஷசன் வீடு இரண்டு நாட்களாக உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. பணிப்பெண், உரிமையாளர் சதிஷசனுக்கு போன் செய்து எடுக்கவில்லை, கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டுள்ளது என, அவரது மகன் பைஜருக்கு தகவல் தெரிவித்தார்.பைஜர், தன் நண்பரான லாஸ்பேட்டையில் உள்ள சதீசை விசாரிக்க அனுப்பினார். அவர் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.குரல் கொடுத்தும் யாரும் வெளியே வராததால், சந்தேகம் எழுந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.தகவலறிந்து வந்த லாஸ்பேட்டை போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, கடும் காய்ச்சல் காரணமாக சதிஷசன் எழ முடியாமல் படுக்கை அறையில் மயங்கி கிடந்தார். அவரது மனைவி சைலஜாவும், சமையல் அறையில் கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு உடைந்து எழ முடியாமல் கிடப்பது தெரியவந்தது. வயோதிகம் காரணமாக இருவரும் எழுந்து செல்ல முடியாமல், உணவு ஏதும் உட்கொள்ளாததால் மயங்கி கிடந்தனர்.இதையடுத்து, ஜிப்மர் மருத்துவமனையில் இருவரையும் போலீசார் அனுமதித்தனர். தற்போது இருவரும் உடல்நலம் தேறி, சிகிச்சை பெற்றுவருகின்றனர்.