சங்கராபரணி ஆற்றின் கரையில் ஆக்கிரமிப்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கல்
திருக்கனுார், : செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் தடுப்பணை கரையை உடைத்து ஆக்கிரமிப்பு, செய்தவர்கள் காலி செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு- திருவக்கரைசங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின், இருகரைகளிலும், கிரவல் மண் கொட்டப்பட்டு சாலை அமைக்கப்பட்டது.இந்நிலையில், செட்டிப்பட்டு கரைப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கிராவல் மண் சாலை கடந்த ஆண்டு பெய்த கனமழையால் சேதமடைந்ததை இதுவரை சீரமைக்கப்படவில்லை.இதற்கிடையே, அதன் அருகேயுள்ளகரைப்பகுதியையும் சிலர் ஆக்கிரமித்து வருவதால் கரை பலவீனம் அடைந்து உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது குறித்து தினமலரில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, பொதுப்பணித்துறை நீர்பாசனப் பிரிவு இளநிலை பொறியாளர் ஜெயராம் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கரைப்பகுதியை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.அப்போது, கரையை அளவீடு செய்த அதிகாரிகள், ஆக்கிரமிப்பு செய்தது உறுதி செய்யப்பட்டதால், அதனை உடனடியாக காலி செய்ய வேண்டும் இல்லையெனில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரையை உடைத்து ஆக்கிரத்துள்ளவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.