உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி : உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் நிதியுதவி திட்டம் குறித்து புதுச்சேரி வேளாண் துறை நில உபயோகத் திட்டம் தரக்கட்டுப்பாடு கூடுதல் வேளாண் இயக்குநர் ஜெயசங்கர் செய்தி குறிப்பு: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை சார்பில் 2025-26ம் நிதியாண்டில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நிதியுதி வழங்குதல் திட்டத்தில் கீழ் ஒரு முறை நிதியுதவியாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. மேலும், பயிறு வகைகள், சிறுதானியங்கள், கரும்பு மதிப்பு கூட்டுதல் நிறுவனம் அமைத்திட 35 சதவீதம் மானியம், 10 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் வழங்கப்பட உள்ளது. பிராண்ட்டிங் உருவாக்குதல் ஆகியவற்றிற்கு ஒருமுறை நிதியுதவியாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் நிலையான சுய நிர்வாக அமைப்புகளாக செயல்படவும், சேவைகளை திறம்பட வழங்கவும் இந்த திட்டம் உதவும். நிதியுதவி பெறுவதற்கான விண்ணப்பங்களை தகுதியுள்ள நிறுவனங்கள், கூடுதல் வேளாண் இயக்குநர் நில உபயோகத் திட்டம் தரக்கட்டுப்பாடு அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை தேவையான இணைப்புகளுடன் அக்டோபர் 17 ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.