ஐந்தாம் வகுப்பு மாணவர் கையில் கூல் லிப் அதிர்ச்சியில் உறைந்துபோன ஆசிரியர்கள்
புதுச்சேரி என்றால் சித்தர்கள் வாழ்ந்த ஆன்மிக பூமி, சுற்றுலா நகரம் என்ற பெருமை உள்ளது. ஆனால் வெளி மாநிலத்தவர் மனதில் முதலில் நினைவுக்கு வருவது சரக்குதான். தெருவுக்கு தெரு திறந்துள்ள மதுபான கடை, ரெஸ்டோ பார்களுக்கு வெளி மாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிகின்றனர்.புதுச்சேரியில் மது மட்டுமின்றி கஞ்சா, புகையிலை பொருட்களும் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடந்து வந்த போதைபொருள் விற்பனை, தற்போது உள்ளூர் இளைஞர்கள் முதல் பள்ளி பருவ மாணவர்கள் வரையில் சீரழித்து வருகிறது.இளைஞர்களின் கைகளில் கிடைத்த கஞ்சா, புகையிலை போதை பொருட்கள் (கூல் லிப்) தற்போது அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் மத்தியில் சரளாக புழங்குகிறது. கஞ்சா, கூல் லிப் பயன்படுத்தி கொண்டு பள்ளிக்கு வரும் மாணவர்கள் மூர்க்கமாக நடந்து கொள்கின்றனர்.இத்தகைய மாணவர்களை பார்த்ததும், ஆசிரியர்கள் அஞ்சி ஒதுங்கி செல்லும் வேதனை பல பள்ளிகளில் உள்ளது. சமீபத்தில் 5ம் வகுப்பு பயிலும் மாணவர் கையில் கூல் லிப் இருந்தை பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்தே போயுள்ளனர்.புதுச்சேரியின் அடுத்த தலைமுறையான மாணவர்கள் சமுதாயம், போதையின் பாதையில் சிக்கி சீரழிவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கான எதிர்கால அதிரடி திட்டத்தை அரசு உடனடியாக செயல்படுத்தினால் மட்டுமே, தீர்வு காண முடியும்.அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், போதை வஸ்துக்களால் மாணவர் சமுதாயம் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டியது கட்டாயம். கிராமங்களில் மது பழக்கத்தால் சிறு வயதிலேயே பல பெண்கள் விதவையாகி வருகின்றனர். கூலி வேலைக்கு செல்லும் தாய் தனது குழந்தைகளை சரிவர கவனிப்பதில்லை. இதனால் சிறு வயதிலே கஞ்சா, கூல் லிப் போன்ற போதை பழக்கத்திற்கு சிறார்கள் ஆளாகி எதிர்காலத்தை வீணாக்குகின்றனர்.சமுதாயத்தை மதுபானம், மாணவர்களை அழிக்கும் கஞ்சா, கூல் லிப் போன்றவையை ஒட்டுமொத்தமாக ஒழித்தால் மட்டுமே ஆரோக்கியமான எதிர்கால இளைஞர்களை உருவாக்க முடியும். பள்ளி பருவத்திலே போதைக்கு அடிமையானால், எதிர்காலத்தில் குற்றங்கள் தான் அதிகரிக்கும் என கூறினர்.
கவுன்சிலிங் தேவை
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் வாரம் ஒருமுறை உளவியல் நிபுணர்கள் நேரில் சென்று, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதையின் பாதைக்கு திரும்பிய மாணவர்களை அடையாளம் கண்டு, கவுன்சிலிங் அளிக்க வேண்டும். மாநில முழுதும் ஆசிரியர்கள், போலீஸ், சமூக அமைப்புகள் என அனைத்து தரப்பும் ஒருங்கிணைந்து செயல்பாட்டால் மட்டுமே மாணவர் மத்தியில் உலா வரும் போதை வஸ்துக்களின் புழக்கத்தை ஒழிக்க முடியும்.