பட்டாசு வெடித்து கோவில் பந்தல் தீப்பிடித்தது
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, சோலைநகர் செங்கேணி அம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கடந்த 4ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நடந்த சுவாமி வீதி உலாவின்போது, வான வேடிக்கை நடந்தது. இரவு 11:00 மணியளவில் பட்டாசிலிருந்து வெளிவந்த தீப்பொறி, கோவில் வளாகத்தின் முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் பட்டு தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமள என பரவி பந்தல் முழுதும் எரிய துவங்கியது. தகவலறிந்த புதுச்சேரி தீ யணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து முத்தியால்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.