மீனவர்கள் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்
புதுச்சேரி: புதுச்சேரியில் இ.பி.சி.,க்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்ககோரி மீனவர்கள் நேற்று கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலத்தில் 2010ம் ஆண்டு முதல் மீனவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இ.பி.சி., 2 சதவீத தனி ஒதுக்கீடு, எம்.பி.சி.,யில் 20 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மீனவ மக்கள் தொகைக்கு ஏற்ப இ.பி.சி.,யில் குறைந்தபட்சம் 10 சதவீதம் அரசு இட ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்க வேண்டும் என, பல்வேறு கட்ட போராட்டங்களில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சுனாமி நினைவு தினமான நேற்று இ.பி.சி.,க்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, அனைத்து மீனவ அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் தலைமைச் செயலகம் எதிரே மீனவர்கள் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், கடற்கரை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.