திட்டப் பணிகளை விரைந்து முடிக்க கவர்னரிடம் மாஜி அமைச்சர் மனு
புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதியில் மக்கள் நலத்திட்ட பணிகளை விரைந்து முடிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம், கவர்னரிடம் மனு அளித்தார். காலாபட்டு தொகுதியில் தொய்வடைந்துள்ள நலதிட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம், கவர்னர் கைலாஷ்நாதனிடம் மனு அளித்தார். மனுவில், கூறியிருப்பதாவது: காலாப்பட்டு தொகுதியில் என்னால் துவக்கப்பட்ட மக்கள் நலத்திட்ட பணிகள், தற்போது மந்தகதியில் நடந்து வருகிறது. விரைவில் மழைக்காலம் துவங்க உள்ளதால், போர்க்கால அடிப்படையில் பணிகளை முடிக்க வேண்டும். காலாப்பட்டு மீனவ கிராமங்களில் வாழும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட, கடலரிப்பு தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஆலங்குப்பம், கருவடிக்குப்பம் பகுதிகளில் விடுபட்ட வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். லட்சுமி நகர் பகுதியில் அமைய உள்ள தாங்கு சுவர் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மழைக்காலம் துவங்குவதற்குள் இப்பணிகளை முடிக்காவிட்டால், பொதுமக்கள் கடும் அவதியடைவர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட கவர்னர் அதிகாரிகளிடம் கூறி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.