தரமற்ற அரிசி வழங்குவதாக மாஜி எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
புதுச்சேரி : முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:தீபாவளிக்கு அரசு அறிவித்த இலவச அரிசி, சர்க்கரை 15 நாட்கள் ஆகியும் இதுவரை பல பகுதிகளில் வழங்க படவில்லை. அனைத்து ரேஷன் கடைகளையும் நிரந்தரமாக திறக்க இதுவரை அரசாணை வெளியிடவில்லை. தீபாவளிக்கு கொடுக்க வேண்டிய அரிசி, சர்க்கரையை பொங்கல் வரை அரசு கொடுக்குமா என கேள்விக்குறியாக உள்ளது.அரிசி ஒரே மாதிரியான தரத்தில் வழங்கப்படவில்லை. அதை தரம் நிர்ணயம் செய்ய நேர்மையான அதிகாரிகளை அரசு நியமிக்க வேண்டும். கவர்னர் அரிசி தரம் குறித்து ஆய்வு செய்து, மக்களுக்கு நல்ல அரிசி வழங்க உத்தரவாதம் வழங்க வேண்டும்.இடைத்தரகர் மூலம் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதை தடுக்க வேண்டும். மக்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருந்ததால், அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர். தரமற்ற அரிசி சப்ளை செய்த ஒப்பந்ததாரர் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.