உயர்த்தப்பட்ட மகளிர் உரிமை தொகைக்கான அரசாணை வெளியீடு
புதுச்சேரி: குடும்ப தலைவிக்கான உயர்த்தப்பட்ட 2,500 ரூபாய் தொடர்பான, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் இத்தொகை குடும்ப தலைவிகளுக்கு கிடைக்கும். புதுச்சேரி சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு சில மாதங்களே உள்ள சூழ்நிலையில், புதுச்சேரி அரசு மக்கள் நல திட்டங்களை வேகப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதியோர், மகளிர் ஓட்டுகளைகுறி வைத்து, அதற்கான நலத்திட்ட பணிகளை வேகப்படுத்தி வருகிறது. அதன்படி,அரசின் எந்த துறைகளிலும் மாதாந்திர உதவித்தொகை ஏதும் பெறாத 21 வயது முதல் 55 வயதுக்குள் இருக்கும் வறுமை கோர்ட்டிற்கு கீழ் உள்ள ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுவரை 65 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் 6.50 கோடி ரூபாய் புதுச்சேரி அரசு செலவழிக்கிறது. இந்த உதவித் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இந்த உதவித் தொகையை உயர்த்தி கொடுக்க கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் வழங்கிய நிலையில், தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட மகளிர் உரிைமத் தொகை அடுத்த மாதம் கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம் புதுச்சேரி அரசுக்கு கூடுதலாக 9.75 கோடி ரூபாய் செலவாகும். துவக்கம் எப்போது குடும்ப தலைவிகளுக்கு உயர்த்தப்பட்ட 2,500 ரூபாய் கொடுக்கும் திட்டத்தை வரும் 22ம் தேதி துவக்கி வைக்க முதல்வர் ரங்கசாமி தேதி கொடுத்துள்ளார். இருப்பினும் பொங்கல் பரிசாக 3 ஆயிரம் ரூபாய் அரசு நிதியை கொடுத்துள்ள சூழ்நிலையில், பிப்., முதல் வாரத்தில் ஆரம்பிக்கலாம் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். திட்ட துவக்கம் குறித்து ஓரிரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது.