உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தனியார் பஸ் - கார் மோதல் அரசு டாக்டர் உயிரிழப்பு

தனியார் பஸ் - கார் மோதல் அரசு டாக்டர் உயிரிழப்பு

காரைக்கால்: காரைக்காலில் அதிகாலை நடந்த சாலை விபத்தில் அரசு டாக்டர் இறந்தார். மூவர் படுகாயம் அடைந்தனர். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம்; டில்லியில் மெக்கானிக்கல் இன்ஜினியர். இவரது மனைவி நந்தினி, 36; வேதாரண்யம் அரசு மருத்துவமனை கண் டாக்டர். இவர், சென்னையில் நடக்கும் அலுவலக ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க, நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு தன், 'ஹூண்டாய் ஐ - 10' காரில் புறப்பட்டார். காரை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ஆனந்த், 44, ஓட்டினார். நந்தினியின் தோழி தஞ்சாவூரை சேர்ந்த அபிநயா, 33, உடன் சென்றார். நேற்று அதிகாலை, 3:45 மணியளவில், புதுச்சேரி - காரைக்கால், கோட்டுச்சேரி வழியாக சென்றபோது திருவேட்டக்குடி, பாரதியார் சாலை பஸ் நிலையம் அருகில், சாலையோரம் நின்ற மாடு மீது மோதிய கார், கட்டுப்பாட்டை இழுந்து எதிரே வந்த தனியார் பஸ் மீது மோதியது. இதில், டாக்டர் நந்தினி, அபிநயா, டிரைவர் ஆனந்த் மற்றும் பஸ்சில் பயணம் செய்த செந்தில்குமார் உள்ளிட்ட நான்கு பேர் படுகாயமடைந்தனர். அவர்களை காரைக்கால் அரசு மருந்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து நந்தினி வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார், கார் டிரைவர் ஆனந்த் மற்றும் பஸ் டிரைவர் நாகை, திருக்குவளை ஆய்மூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன், 34, ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ