உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  திறமையான இளைஞர்களை வரவேற்க அரசு தயாராக உள்ளது: கவர்னர் கைலாஷ்நாதன்

 திறமையான இளைஞர்களை வரவேற்க அரசு தயாராக உள்ளது: கவர்னர் கைலாஷ்நாதன்

புதுச்சேரி: மகளிர் பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்த இருநாள் வேலைவாய்ப்பு முகாம் துவக்க விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது: போட்டி நிறைந்த இன்றைய உலகில் கல்வி மட்டுமே போதாது. கல்வியுடன் திறன் மேம்பாடும் நம்முடைய இளைஞர்களுக்கு தேவை. செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல், உற்பத்தி, சேவை பிரிவு என்று எல்லா துறைகளிலும் திறமையான மனித வளம் தேவைப்படுகிறது. புதுச்சேரி மாநிலம் ஒரு உயர் கல்வி கேந்திரமாக வளர்ந்துள்ளது. இந்த கல்வி நிறுவனங்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் மாணவர்கள் படிப்பை முடித்து விட்டு வெளியே வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் அரசு துறைகளில் வேலை கிடைப்பது என்பது இயலாத காரியம். பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் தேசிய அளவில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம்களில் மத்திய அரசு துறைகளில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. புதுச்சேரியில் அரசு துறைகளில், நீண்ட காலமாக காலியாக இருந்த பணி இடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருகிறது. நேரடி நியமனம் மூலமாக இதுவரை 4,000 இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டு இருக்கிறது. இன்னும் 1000 பணியிடங்களை நிரப்புவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. திறமையான இளைஞர்களை வரவேற்க அரசு, எப்போதும் தயாராக இருக்கிறது. இளைஞர்கள் அரசு வேலைக்காக மட்டுமே காத்திருக்க முடியாது. அதே நேரத்தில், தனியார் நிறுவனங்கள், பிற அமைப்புகள் மூலமாக அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான சூழலை உருவாக்கித் தருவது அரசின் கடமை. அதன் ஒரு பகுதிதான் இந்த வேலைவாய்ப்பு முகாம், தொழில் பயிற்சி, திறன் மேம்பாடு எல்லாம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ