கிரீன் வாரியர்ஸ் இந்தியா அமைப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
பாகூர்: பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாளையொட்டி, பாகூரில் கிரீன் வாரியர்ஸ் இந்தியா அமைப்பின் சார்பில், முன்னாள் ஐ.எப்.எஸ்., அதிகாரி சத்தியமூர்த்தி ஒருங்கிணைப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதனையொட்டி, பாகூர் மூலநாதர் கோவிலில் தேச நலனுக்காக இடைவிடாத மகா ருத்ரயாகம் நடந்தது. பிரம்மாண்ட யாகசாலை உருவாக்கப்பட்டு அந்த யாகத்தில் ரிக் மற்றும் யஜூர் வேத மந்திரங்கள் வேத விற்பனர்களால் ஓதப்பட்டது. பாகூர் விஜயவர்த்தனி திருமண மகாலில் கிரீன் வாரியர்ஸ் இந்தியா அமைப்பு மற்றும் ஜிப்மர் சார்பில், ரத்ததான முகாம் நடந்தது. 300க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.மாலை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மத்திய அரசின் கிராமப்புற வாழ்வாதார திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் பாகூர் துாக்குப் பாலத்தில் இருந்து ஊர்வலம் நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மத்திய அரசின் கிராமப்புற வாழ்வாதார திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் பதாகைகளை ஏந்தி பொதுமக்கள் சென்றனர். தேச நலன் காக்கவும் மற்றும் பிரதமர் மோடி நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டி 750 பெண்கள் பங்கேற்ற திரு விளக்கு பூஜை நடந்தது. மாற்றுத் திறனாளிகளுடன், கவர்னர் கைலாஷ்நாதன் கலந்துரையாடி, அவர்களுக்கான நலத்திட்ட உதவிகள், ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மூலநாதர் கோவிலில் கவர்னர் கைலாஷ்நாதன் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில், அவருக்கு பூர்ண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது.