புதுச்சேரியில் வெப்ப அலை விழிப்புணர்வு ஆட்டோ ஊர்வலம்
புதுச்சேரி: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் வெப்ப அலை பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஆட்டோ பிரசாரம் பேரணி நடந்தது. புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், நகராட்சி நிர்வாகம் மற்றும் 'பால் ரக்க்ஷா பாரத்'தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து கடந்த 6 நாட்களாக புதுச்சேரி முழுவதும் வெப்ப அலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. மின்சார ஆட்டோக்கள் மூலம் ஒலிபெருக்கி வாயிலாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து வருகின்றன. உலக மகளிர் தினமான நேற்று, புதுச்சேரி நகராட்சியின் கீழ் இயங்கும் மகளிர் மின்சார ஆட்டோ விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கம்பன் கலையரங்கில் துவங்கிய இந்தப் ஊர்வலத்தை பள்ளித் துணை வட்டம் 1 ஆய்வாளர் அனிதா கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் ராஜா தியேட்டர், அஜந்தா சிக்னல், கடற்கரை சாலை, ரயில் நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் வழியாக சென்றது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்வது எப்படி என்பது குறித்த துண்டுப் பிரசுரங்களை பெண் ஓட்டுநர்கள் பொதுமக்களிடம் வழங்கினர்.