வேதபாரதி அமைப்பு சார்பில் மார்கழி பஜனை துவக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி வேதபாரதி அமைப்பு சார்பில், மார்கழி மகோற்சவம் நேற்று துவங்கியது. புதுச்சேரி வேதபாரதி அமைப்பு சார்பில், மார்கழி பஜனை நிகழ்ச்சி நேற்று புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் இருந்து துவங்கியது. வேதபாரதி பஜனோத்ஸவ கமிட்டி தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ., பஜனையை துவக்கி வைத்தார். வேதபாரதியின் முன்னணி பாகவதர்கள் பஜனை பாடல்களை பாட, அவர்களுடன் ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளி மாணவர்கள் மற்றும் பெரியோர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு திருப்பாவை, திருவெம்பாவை, மற்றும் இறைநாம பஜனையுடன் மாட வீதிகளில் வலம் வந்தனர். மார்கழி மாதம் 30 நாட்களும் நடைபெறும் இந்தப் பஜனை உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, வரும் ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு தினத்தன்று, புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவில், வேதபுரீஸ்வரர் கோவில்களின் மாட வீதிகளில், பள்ளி குழந்தைகள், பெரியோர்கள் பங்கேற்கும் பரதம், கோலாட்டம், கும்மியாட்டம் ஆகியவற்றுடன் இறை நாம பஜனை நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை, வேதபாரதி தலைவர் வழக்கறிஞர் பட்டாபிராமன், பொதுச் செயலாளர் நடராஜன், பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர்.