உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதுச்சேரி சட்டசபையில் 12ல் இடைக்கால பட்ஜெட்

 புதுச்சேரி சட்டசபையில் 12ல் இடைக்கால பட்ஜெட்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில், வரும் 12ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதுகுறித்து சபாநாயகர் செல்வம் கூறியதாவது: புதுச்சேரி 15வது சட்டசபையின் 6வது கூட்டத் தொடரின் 3ம் (கடைசி) பகுதி கூட்டம் வரும் 12ம் தேதி காலை 9:30 மணிக்கு கூடுகிறது. அன்றே, 2026-27 நிதி ஆண்டிற்கான அரசின் செலவினங்களுக்கான முன் அனுமதி வேண்டி, நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார். சட்டசபையில் முன் வைக்கப்பட வேண்டிய விதிகள் மற்றும் ஏடுகள் இருப்பின் அன்றய தினமே வைக்க அனைத்து துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 2025-26 நிதி ஆண்டிற்கான கூடுதல் செலவினங்களுக்கான சட்ட முன்வரைவை தாக்கல் செய்து அனுமதி பெறப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வரும் 16ம் தேதி புதுச்சேரிக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அன்று நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். என்னன்ன திட்டங்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. அதனை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பார். புதுச்சேரி சட்டசபைக்கு வேறு இடத்தில் ரூ.657 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டுவதற்கு திட்டப் பணிகளை முடித்து தயார் நிலையில் வைத்துள்ளோம். இதற்கான நிதியை 50 ஆண்டு கால அவகாசத்தில், 0.5 பைசா வட்டியில் கடன் வாங்கிக் கொள்ள மத்திய அரசு கடந்த மாதமே அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தை, புதுச்சேரிக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்குமாறு பிரதமர் அலுவலகத்திற்கு கோப்பு அனுப்பி உள்ளோம். இவ்வாறு சபாநாயகர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை