பேனர் வைத்த சிம்பு ரசிகர்கள் 3 பேர் மீது வழக்கு அரசியல் கட்சியினருக்கு சலுகையா?
புதுச்சேரி: புதுச்சேரியில் தடையை மீறி பேனர் வைத்த சிம்பு ரசிகர்கள் மற்றும் கோவில் கும்பாபிேஷகத்திற்கு பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.புதுச்சேரி பொதுப்பணித் துறை மத்திய கோட்ட சாலை பிரிவு செயற்பொறியாளர் சீனிவாசன் பொது இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நெல்லித்தோப்பு சிக்னல் சந்திப்பு, திருவள்ளுவர் சாலை நடைபாதையில், பொதுமக்களுக்கு இடையூறாக கொசப்பாளையம் சிலம்பரசன் ரசிகர் மன்றம் சார்பில், பேனர் வைக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து அவர் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். ரசிகர் மன்ற நிர்வாகிகள் பசுபதி; அசோக் ராஜா; மற்றும் பாபு ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதேபோல், லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் உள்ள பொன்னியம்மன் கோவில் கும்பாபிேஷகம் கடந்த 2ம் தேதி நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க வரும் வி.ஐ.பி.க்கள், அரசியல் கட்சி தலைவர்களை வரவேற்று, 60க்கும் மேற்பட்ட பேனர்கள் சாலை முழுதும் வைக்கப்பட்டிருந்தன.இதைக்கண்ட பொதுப்பணித்துறை மத்திய கோட்ட சாலை பிரிவு செயற்பொறியாளர் சீனிவாசன், பேனர் வைத்தவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். கும்பாபிேஷகத்திற்கு பாதுகாப்பு அளிக்க சென்ற போலீசாரும், பேனர் வைத்த மர்ம நபர்கள் மீது புதுச்சேரி திறந்தவெளி அழகு சீர்கெடுத்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பொன்னியம்மன் கோவில் கும்பாபிேஷகத்திற்கு பேனர் வைத்தவர்கள் யார் என்பது குறித்து பொதுப்பணித்துறைக்கும், லாஸ்பேட்டை போலீசாருக்கும் நன்கு தெரியும். ஆனால், ஒருவர் பெயரை கூட எப்.ஐ.ஆரில் குறிப்பிடாமல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:நடிகர் சிம்பு ரசிகர் மன்ற நிர்வாகிகள் பெயர்களை தெரிந்த அதிகாரிகளுக்கு கும்பாபிேஷகத்திற்கு பேனர் வைத்த அரசியல் கட்சி பிரமுகர்களின் பெயர்கள் மட்டும் தெரியாமல் போனதன் காரணமோ என்னவோ..பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒருவேளை பெயரே தெரியாமல் புகார் அளித்தாலும், பேனர் வைத்தவர்களை கண்டுபிடித்து, அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்வது போலீசாருக்கு அத்தனை கடினமான செயல் கிடையாது.புதுச்சேரி மக்கள் மட்டு மின்றி, இங்கு சுற்றுலா வரும் சர்வதேச பயணிகள் வரை அனைத்து தரப்பினரிடமும், இந்த பேனர் கலாசாரம் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.