செட்டிக்குளம் மக்களுக்கு மனைப்பட்டா வழங்கல்
புதுச்சேரி; அரியாங்குப்பம் தொகுதி மக்களுக்கு இலவச மனைப்பட்டாவினை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.அரியாங்குப்பம், கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட செட்டிக்குளம் பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்வதற்காக அரசு புறம்போக்கில் வசித்து வந்த பொதுமக்களின் வீடுகள் அகற்றப்பட்டது. பின், அங்கு வசித்து வந்த மக்களுக்கு புதுச்சேரி அரசு மூலம் இலவச மனைப்பட்டா மற்றும் மத்திய, மாநில அரசு மூலம் வீடுகட்ட கடன், வீடு கட்டும் வரை வாடகை வீட்டில் குடியிருக்க வாடகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.இதையடுத்து 12 குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக 8 பேருக்கு மனைப்பட்டா வழங்கப்பட்டது. தொடர்ந்து, மற்ற 4 பேருக்கு மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி சட்டசபையில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு மனைப்பட்டா வழங்கினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், பாஸ்கர் எம்.எல்.ஏ., உட்பட பலர் பங்கேற்றனர்.