உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செல்பி எடுத்தபோது படகு கவிழ்ந்தது ஆற்றில் தத்தளித்த ஐ.டி., ஊழியர்கள் மீட்பு

செல்பி எடுத்தபோது படகு கவிழ்ந்தது ஆற்றில் தத்தளித்த ஐ.டி., ஊழியர்கள் மீட்பு

அரியாங்குப்பம் : சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்தபோது ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. ஆற்றில் தத்தளித்த ஐ.டி., ஊழியர்கள் 7 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னையை சேர்ந்த ஐ.டி., நிறுவனத்தில் பணி புரியும் 3 பெண் உள்ளிட்ட 7 பேர் நேற்று புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். சக நண்பரின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடிய இவர்கள், கும்பலாக படகு சவாரி செய்வதற்காக வீராம்பட்டினம் கடற்கரைக்கு சென்றனர். அங்கு, அரியாங்குப்பம் முகத்துவார ஆற்றில் படகு சவாரி செய்ய, குதுகலமாக ஏறினர். படகு மாங்குரோவ் காடுகள் வழியே அரிக்கமேடு அருகே சென்று கொண்டிருந்தது. மாங்குரோவ் காடுகளி ன் அழகினை கண்டதும் உற்சாகமடைந்த ஐ.டி., ஊழியர்கள், செல்பி எடுப்பதற்காக அனைவரும் ஒரு பக்கமாக படகில் நகர்ந்தனர். அதில், விசைப்படகு திடீரென சமநிலை இழந்து தள்ளாடியதும் பயணிகள் கூச்சலிட்ட நிலையில், படகு திடீரென தலைக்குப்புற கவிழ்ந்தது. தண்ணீரில் விழுந்த ஐ.டி., ஊழியர்கள், இடுப்பளவு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே மற்றொரு படகில் வந்தவர்கள், தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த ஐ.டி., ஊழியர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். செல்பி மோகத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, புதுச்சேரியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கு பதிய முடிவு

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்து விசாரித்த அரியாங்குப்பம் போலீசார், படகில் செல்பி எடுக்க அனுமதித்த விசைப்படகு உரிமையாளர் மீது, வழக்குப் பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி