உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடத்தப்பட்ட சவுக்கு வியாபாரி திருத்தணி அருகே மீட்பு

கடத்தப்பட்ட சவுக்கு வியாபாரி திருத்தணி அருகே மீட்பு

அரியாங்குப்பம்: கடத்தப்பட்ட அரியாங்குப்பம் சவுக்கு வியாபாரியை திருத்தணி அருகே போலீசார் மீட்டனர்.  அரியாங்குப்பம், அரவிந்தர் நகரை சேர்ந்தவர் நடராஜன், 68; சவுக்கு வியாபாரி. நேற்று முன்தினம் இவரது வீட்டுக்கு வந்த, வியாபாரிகள் தம்பு ரெட்டியார், 65; ரமேஷ், 46, ஆகியோர் சவுக்கு தொழில் சம்மந்தமாக நடராஜனை வெளியூருக்கு அழைத்து சென்றனர். இரவு வரை நடராஜன் வராததால், அவரது மகள் புனிதா தனது தந்தை மொபைலில் தொடர்பு கொண்டார். அப்போது, மொபைலை எடுத்த ரமேஷ் என்பவர், கடன் 7 லட்சம் ரூபாயை கொடுத்து விட்டு, அரக்கோணத்தில் தங்க வைத்துள்ள உனது தந்தையை அழைத்து செல்லுமாறு கூறி, இணைப்பை துண்டித்தார். இதுகுறித்து, அவரது மகள் கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் தனிப்படை அமைத்து, குற்றப்பிரிவு போலீசார் சிரஞ்சீவி, வேல்முருகன் ஆகியோர் அரக்கோணத்திற்கு விரைந்து சென்றனர். நடராஜன் இருக்கும் இடம் திருத்தணி அருகில் உள்ள கேஜி கண்டிகை பகுதியில் மொபைல் டவர் சிக்னல் காட்டியது. அந்த இடத்தை போலீசார் கண்டறிந்து ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த நடராஜனை மீட்டு, புதுச்சேரிக்கு நேற்று காலை அழைத்து வந்தனர்.  இது தொடர்பாக, ரமேஷ் மற்றும் தம்பு ரெட்டியாரிடம் போலீசார் விசாரணை செய்ததில், தொழில் சம்பந்தமாக நடராஜன் 7 லட்சம் ரூபாய் கடன் தரவேண்டியிருந்தது. பல முறை கேட்டும் பணம் தராததால், வீட்டில் இருந்த நடராஜனை தொழில் தொடர்பாக அழைத்து சென்று, வேறு வழியில்லாமல், திருத்தணியில் தங்க வைத்து, அவரது மகளுக்கு மொபைல் மூலம் பணம் கேட்டு மிரட்டினோம் என, தெரிவித்தனர்.  இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அரியாங்குப்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி