செவிலியர் கல்லுாரியில் விளக்கேற்றும் விழா
பாகூர்: பிள்ளையார்குப்பத்தில் உள்ள பாலாஜி வித்யாபீத் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின், கஸ்துாரிபா காந்தி செவிலியர் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் முதல் ஆண்டு, 23வது பிரிவு மாணவர் மற்றும் மாணவிகளுக்கான விளக்கேற்றும் விழா நேற்று நடந்தது. கல்லுாரி துணை முதல்வர் சுமதி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் புனிதா ஜோசப்பின், புளோரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழி வாசிக்க, மாணவ - மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதி மொழி ஏற்றனர். பாலாஜி வித்யாபீத் துணைவேந்தர் நிஹார் ரஞ்சன் பிஸ்வாஸ், மாணவர்களுக்கு தொழில் ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தலைமை விருந்தினராக, பிம்ஸ் செவிலியர் கல்லுாரி முதல்வர் அன்னல் ஏஞ்சலின் கலந்து கொண்டு, 'செவிலியர் தொழில் சமூகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஒரு மனித நேய சேவைத் துறை' என்று வலியுறுத்தினார். பேராசிரியர் கீதா, விளக்கேற்றும் விழாவின் முக்கியத்துவம், செவிலியர் துறையின் அன்னையான புளோரன்ஸ் நைட்டிங்கேலின் கோட்பாடுகள் குறித்து விளக்கினார். மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி டீன் சீதேஷ் கோஷ் வாழ்த்தி பேசினார். பேராசிரியர் அன்னி அன்னல் நன்றி கூறினார்.