மாதாந்திர இலவச அரிசி நவ., 14 முதல் வழங்கப்படும்
முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு புதுச்சேரி: மாதாந்திர இலவச அரிசி நவ., மாதம் 14ம் தேதி முதல் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். புதுச்சேரியில் மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு இலவச அரிசிக்கான பணம் குடும்ப தலைவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் மாநில அரசு சார்பில் சிவப்பு ரேஷன் கார்டுக்கு 20 கிலோ, மஞ்சள் ரேஷன் கார்டுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. இந்த அரிசிக்கான பணமும் கடந்த காங்., ஆட்சி காலத்தில் குடும்ப தலைவி பெயரில் நேரடியாக செலுத்தும் வகையில் மாற்றப்பட்டது. கடந்த தேர்தலின்போது, மாநில அரசின் இலவச அரிசிக்கான பணத்திற்கு பதில் அரிசி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, இலவச அரிசிக்கான பணத்திற்கு பதில் மீண்டும் அரிசி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்தார். முதற்கட்மாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பின் முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் கூறியதாவது; சிவப்பு ரேஷன் கார்டுக்கு 20 கிலோ, மஞ்சள் ரேஷன் கார்டுக்கு 10 கிலோ இலவச மாதந்திர அரிசி, நவ. 14 ம் தேதி முதல் வழங்கப்படும். கடந்த காலத்தில் இருந்த அதே ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்கப்படும். ரேஷன் கடை இல்லாத இடங்களில் அங்கன்வாடிகள், பள்ளிகள் மூலம் அரிசி வழங்கப்படும் என தெரிவித்தார்.