வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சிறப்பு மிக சிறப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் தற்போதுள்ள புதிய பென்ஷன் திட்டத்துடன் ஒருங்கிணைந்த புதிய பென்ஷன் திட்டமும் முன் தேதியிட்டு அமலுக்கு வந்துள்ளது.புதுச்சேரி அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்கள் முதுமை செலவினை சமாளிக்க ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. இது தவிர பணவீக்கத்திற்கு ஏற்ப ஓய்வூதியத்தில் மாற்றங்களும் செய்யப்பட்டன. இது பொருளாதார ரீதியாக அரசு ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.ஆனால், நிதிசுமையை காரணம் காட்டி கடந்த 2003ல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு முடிவுக்கு கொண்டு வந்தது. அத்துடன் புதுச்சேரி அரசும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு குட் - பை சொன்னது.அடுத்து 2004ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய ஓய்வூதியத் திட்டமான என்.பி.எஸ்., திட்டத்தை தான் தற்போது புதுச்சேரியில் அமலில் உள்ளது. இந்த திட்டத்தை அரசு ஊழியர் சங்கங்கள் கடுமையாக எதிர்த்து வந்தன. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் போர்க்கொடி உயர்த்தின. இது போன்ற சூழ்நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்துடன் ஒருங்கிணைந்த புதிய ஓய்வூதிய திட்டம் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு அமலுக்கு வருவதாக புதுச்சேரி அரசு அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. என்ன வித்தியாசம்
தற்போதுள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம் பண வீக்கத்துடன் இணைக்கப்படவில்லை. முதலீட்டில் இருந்து வரும் வருமானத்திற்கு வருமான வரிவிலக்கு கிடைக்கிறது. மொத்த நிதியின் 60 சதவீதம் வரை ஓய்வு பெறும்போது ரொக்கமாக எடுத்துக்கொள்ளலாம். அதற்கு எந்த வருமான வரியும் கிடையாது.ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஒரு ஊழியர் ஓய்வூதிய நிதிக்கு பங்களிக்க வேண்டும். அதில் ஒரு பகுதி பணியாளராலும், ஒரு பகுதி பணியமர்த்தியுள்ள நிறுவனத்தாலும் பங்களிப்பு செய்யப்படுகிறது. பொதுவாக பணியாளர் மொத்த சம்பளத்தில் 10 சதவீத பங்களிப்பையும், நிறுவனம் 14 சதவீத பங்களிப்பையும் அளிக்கின்றனர். புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முதலீட்டுத் திட்டம் மற்றும் அதில் கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில் ஊழியர் ஓய்வூதியத்தைப் பெறுகிறார். இந்த ஓய்வூதியமானது எதிர்காலத்தில் பணியாளர் தேர்ந்தெடுக்கும் முதலீட்டுத் திட்டத்தின் வருமானத்தைப் பொருத்து இருக்கும்.எனவே, புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சரியான தொகையை கணிப்பது கடினம். ஆனால் இது பொதுவாக பழைய ஓய்வூதிய திட்டத்தை விட குறைவாகவே உள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அகவிலைப் படியின் படி உயர்வு இருக்காது. அதாவது இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியத் தொகை ஓரளவு அப்படியே இருக்கும். ஒருங்கிணைந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை பொருத்தவரை குறைந்தபட்சம் 50 சதவீத ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் கிடைக்கும். 10 ஆண்டுகளுக்கும் அதிகமான சேவை காலத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் உத்தரவாத ஓய்வூதியம் உறுதியாக இருக்கும். ஓய்வு பெற்ற ஊழியரின் மரணத்திற்கு பிறகு வாழ்க்கைத் துணைக்கு 60 சதவீத ஓய்வூதியம் கிடைக்கும். ஊழியர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பணவீக்கத்துடன் இணைக்கப்படும். வேலையை விட்டுச்சென்றால் பணிக்கொடையுடன் கூடவே ஒரு குறிப்பிட்ட ரொக்கத்தொகை அளிக்கப்படும்.புதுச்சேரியில் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 35 ஆயிரம் ஊழியர்கள் தற்போது பயனடைந்து வருகின்றனர். 01.01.2004ம் ஆண்டிற்கு பிறகு என்.பி.எஸ்., புதிய ஓய்வூதியம் திட்டமும் அமலில் உள்ளது. அத்துடன், தற்போது ஒருங்கிணைந்த யு.பி.எஸ்., புதிய ஓய்வூதிய திட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் தொடர உள்ளார்களா அல்லது ஒருங்கிணைந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் தொடர உள்ளார்களா என விரைவில் அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து இணைக்கப்பட உள்ளனர்.
சிறப்பு மிக சிறப்பு