என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., - பொதுச்செயலாளர் மோதல்
புதுச்சேரி: என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., - பொது செயலாளர் மோதல் ஆடியோ வைரலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., ரமேஷ். வரும் தேர்தலில் மீண்டும் அத்தொகுதியில் போட்டியிட தயாராகி வருகிறார்.அத்தொகுதியில் என்.ஆர்.காங்., மாநில செயலாளர் அழகானந்தம் போட்டியிட பரிசு பொருட்களுடன் களம் இறங்கி விட்டார். இதற்கு பின்னணியில் கட்சி பொதுச்செயலாளர் ஜெயபால் இருக்கலாம் என, தனது ஆதரவாளர்களிடம் ரமேஷ் குற்றம் சாட்டி பேசி வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரி என்.ஆர்.காங்., பொதுச்செயலர் ஜெயபால் ஆடியோ பதிவை வெளியிட்டு தன்னிலை விளக்கம் அளித்தார். இந்த ஆடியோ சமூக வளைதளங்கில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், கதிர்காமம் தொகுதியில் எனது துாண்டுதலால் சில பேரை நான் தேர்தலில் நிற்க சொன்னதாக தேவையில்லாத குற்றச்சாட்டை வைத்து சிலர் பேசி வருகின்றனர். தேர்தலில் நிற்கவைக்கவோ, வாக்குறுதி தரவோ எனக்கு அதிகாரம் இல்லை. தலைவருக்கு கட்டுப்பட்டவன். தலைவர் சொல்வதை தான் செய்வேன். கட்சியினரை மதிக்க வேண்டும். எம்.எல்.ஏ., அமைச்சர், பொறுப்பாளர், தொண்டர்கள் ஆகியோர் நிகழ்ச்சிக்கு அழைத்தால் செல்வேன். எல்லாருக்கும் பொதுவான பொறுப்பில் உள்ளேன். யாருக்கும் நான் உத்தரவாதம் தரமுடியாது. நான் யாரையும் தேர்தலில் நிற்க சொல்லவில்லை. எம்.எல்.ஏ., ரமேஷ் பரவலாக என்னை பற்றி அவதுாறு பேசி வருவதாக பலர் சொல்கின்றனர். மற்றவர் பேச்சை கேட்டு பேசுகிறாரா என தெரியவில்லை. விளக்கத்தை முதல்வர் , என்னிடமோ நேரில் கேட்கலாம். எனக்கு நல்ல பழக்கமான அவர் என்னிடமே நேரில் கேட்கலாம். இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் முதல்வர் ரங்கசாமி கையில்தான் உள்ளது.என்னை விமர்சனம் செய்து அவதுாறு பேசுவது தேவையில்லாதது. அது உண்மையில்லை. யார் சொன்னாலும் நம்பாதீங்க...இவ்வாறு கூறியுள்ளார். என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., - பொது செயலாளர் மோதல் அக்கட்சியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.