உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய பஸ் நிலையம் 30ம் தேதி திறப்பு இறுதிகட்ட பணியில் அதிகாரிகள் தீவிரம்

புதிய பஸ் நிலையம் 30ம் தேதி திறப்பு இறுதிகட்ட பணியில் அதிகாரிகள் தீவிரம்

புதுச்சேரி: புதுச்சேரி புதிய பஸ் நிலையம் வரும் 30ம் தேதி திறக்கப்பட உள்ளது.புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் இயங்கி வந்த பஸ் நிலையத்தை இடித்துவிட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.31 கோடி செலவில் விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. கட்டுமான பணியை விரைந்து முடிப்பதற்காக கடந்த ஜூன் மாதம், பஸ் ஸ்டாண்ட் தற்காலிகமாக ஏ.எப்.டி., மைதானத்திற்கு மாற்றப்பட்டது.தற்காலிக பஸ் ஸ்டாண்டில் போதிய அடிப்படை வசதி இல்லாமல், குண்டும் குழியுமாக உள்ளதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய பஸ் நிலைய கட்டுமான பணியை விரைந்து முடிக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து கட்டுமான பணி கடந்த டிசம்பர் மாதம் முடிக்கப்பட்டது. அதனால், பொங்கல் பண்டிகைக்கு பின் பஸ் நிலையம் திறக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், என்ன காரணத்தினாலோ, கட்டி முடித்த பஸ் நிலையத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு விடாமல், காலம் கடத்தப்பட்டு வந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் கடந்த 18 ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.இந்நிலையில் நேற்று சட்டசபையில் முதல்வரை சந்தித்து நேரு எம்.எல்.ஏ., பஸ் நிலையம் திறப்பு குறித்து பேசினார். அப்போது, முதல்வர் வரும் 30ம் தேதி திறந்திடலாம் எனக் கூறினார். இதனால், கட்டி முடித்து 4 மாதங்களாக மூடிக்கிடந்த பஸ் நிலையம் வரும் 30ம் தேதி திறப்பது உறுதியாகி உள்ளதை தொடர்ந்து, இறுதிகட்ட பணிகளையும், திறப்பு விழாவிற்கான பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

விடிவு காலம் வந்தது

புதுச்சேரியின் அடையாளங்களில் ஒன்றான கலவை கல்லுாரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.4.80 கோடி செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தது. இப்பள்ளி கட்டடமும் வரும் 30ம் தேதி மாலை 4:30 மணிக்கு திறக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை