உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சென்னைக்கு மட்டும்; பா.ஜ., மாநில தலைவராக ராமலிங்கம் தேர்வாகிறார் இன்று தேசிய பொது செயலாளர் முன்னிலையில் பதவி ஏற்பு

சென்னைக்கு மட்டும்; பா.ஜ., மாநில தலைவராக ராமலிங்கம் தேர்வாகிறார் இன்று தேசிய பொது செயலாளர் முன்னிலையில் பதவி ஏற்பு

புதுச்சேரி : புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவராக ராமலிங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். அவர் இன்று மதியம் 12:00 மணிக்கு கட்சியின் தலைவராக பதவி ஏற்கிறார்.புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் பா.ஜ., அனைத்து ஏற்பாடுகளை செய்து வருகிறது. முதல் கட்டமாக கட்சிக்கு 1.53 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். அடுத்து கிளை, தொகுதி, மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து மாநில தலைவர் தேர்தல் பொறுப்பாளராக தேசிய பொதுச் செயலாளர் தருண்சுக் நியமிக்கப்பட்டார். மாநில தலைவர் பதவிக்கு கடந்த ஜனவரி மாதம் தேர்தல் நடக்கும் என எதிர்பார்த்த நிலையில் திடீரென கிடப்பில் போடப்பட்டது.கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளதால், மாநில தலைவர் தேர்தலை விரைந்து முடிக்க கட்சி தலைமை உத்தரவிட்டது. அதன்பேரில் புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவர் பதவிக்கு 29, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கும் என, கடந்த 27 ம் தேதி அறிவிக்கப்பட்டது.அதன்படி நேற்று காலை மனு தாக்கல் துவங்கியது. காலை 11.24 மணிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., ராமலிங்கம் மனு தாக்கல் செய்தார். அவருக்கு மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் 10 பேர் முன்மொழிந்தனர்.மனுக்களை மாநில தேர்தல் அதிகாரி அகிலன், இணை தேர்தல் அதிகாரி வெற்றிசெல்வன் ஆகியோர் பெற்று, பரிசீலனை செய்தனர். 12:00 மணிக்கு மனு தாக்கல் முடிந்த நிலையில், வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.மனு தாக்கலின் போது மேலிட பார்வையாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் அமைச்சர் சாய் சரவணன் குமார், எம்.எல்.ஏ.,க்கள் ஜான் குமார், கல்யாணசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.மாநில தலைவர் பதவிக்கு ராமலிங்கத்தை தவிர வேறு எவரும் மனு தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி தலைவராகிறார்.இதற்கான அறிவிப்பு, இன்று மதியம் 12:00 மணியளவில் மரப்பாலம் சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடக்கும் பா.ஜ., விழாவில் முறைப்படி வெளியிடப்படுகிறது. மாநில தேர்தல் அதிகாரிகள், புதிய தலைவர் அறிவிப்பை வெளியிடும்போது, தற்போதைய தலைவர் செல்வகணபதி மரபுப்படி கட்சியின் கொடியை புதிய தலைவர் ராமலிங்கத்திடம் ஒப்படைக்க உள்ளார்.தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் முன்னிலையில் நடக்கும் இப்பதவியேற்பு விழாவில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

துாக்கி வந்த நிர்வாகிகள்

பா.ஜ., மூத்த தலைவர் செல்வம் நியமன எம்.எல்.ஏ., வாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அவர் நேற்று நடந்த மாநில தலைவர் தேர்தலுக்கு ராமலிங்கம் மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். உடல்நிலை சரியில்லாத அவரால் மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு வர முடியவில்லை. அதை கண்ட நிர்வாகிகள் அவரை குண்டு கட்டாக மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு துாக்கி வந்தனர்.

அமைச்சர் மனு தாக்கல்

பா.ஜ., மாநில தலைவர் பதவிக்கு மனு தாக்கல் நடந்தபோது, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு தற்போதைய மாநில தலைவர் செல்வகணபதி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனித்தனியாக மனு அளித்தனர். இவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கான அறிவிப்பும் நாளைய விழாவில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை