உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்

மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்

புதுச்சேரி : பருவ மழையை எதிர்கொள்ள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை: புதுச்சேரியில், ஆண்டுதோறும் பருவ மழைக்காலங்களில் பல இடங்களில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்பதும், மழைநீருடன் கழிவுநீர் கலந்து அது குடிநீரில் கலப்பதும், சாலைகள் பழுதடைவது, போக்குவரத்து தடை போன்ற பல்வேறு இன்னல்களால் மக்கள் பாதிக்கின்றனர். எனவே, மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும். நகரப்பகுதியில் பல்வேறு வாய்க்கால்கள் வழியே வரும் மழை நீர் உப்பனாறு வழியாக வடிய வேண்டும். ஆனால், பாலம் கட்டுமான பணிக்காக உப்பனாற்றில் மண் கொட்டப்பட்டதால், கடந்தாண்டு மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதற்கு, முழுக்க அதிகாரிகளின் அலட்சியமே காரணம். இந்த பருவ மழைக்குள் உப்பனாற்றில் மழைநீர் தடையின்றி செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் நீரேற்று நிலையங்கள் தொடர்ந்து இயங்கும் வகையில் தொழில்நுட்ப நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். கிராமங்கள் தோறும் மருத்துவக் குழுக்கள் அமைக்க வேண்டும். தொடர் மழையின்போது தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கு தேவையான உணவு வழங்கவும் அவசரகால பேரிடர் மீட்பு சிறப்பு மையங்கள் ஏற்படுத்த வேண்டும். மழை பாதிப்புகளை கவனத்தில் கொண்டு போலீஸ், மின்சாரம், சுகாதாரம், உள்ளாட்சி போன்ற முக்கிய துறைகளை ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கையாக செயல்பட்டால் பெரும் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க முடியும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ