உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: 7 பேருக்கு மறு வாழ்வு

விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: 7 பேருக்கு மறு வாழ்வு

புதுச்சேரி: மூளைசாவு அடைந்த வாலிபரின் கிட்னி, கல்லீரல், கண் ஆகியவை ஏழு பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், கீழ்புத்துப்பட்டு அகதிகள் முகாமை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் பிரேம்குமார்,19; இவர் கடந்த 31ம் தேதி இரவு 10:00 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தனது கே.டி.எம். டியூக் பைக்கில் புதுச்சேரிக்கு புறப்பட்டார். காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி இ.சி.ஆரில் உள்ள பள்ளத்தில் பைக் இறங்கியதில், நிலை தடுமாறி விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.உடன், அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக மூலக்குளம் ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் மூளைச் சாவு அடைந்தார்.அதனால், அவரது உடல் உறுப்புகளான கிட்னி, கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் இரு கண்களை தானம் கொடுக்க அவரது பெற்றோர் முன்வந்தனர்.அதனைத் தொடர்த்து, ஐந்து உறுப்புகளும் ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் டாக்டர் வெங்கட்ராம் குழுவினர் தலைமையில் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. ஒரு கிட்னி அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 47 வயது நபருக்கு பொருத்த கொண்டு செல்லப்பட்டது.மற்றொரு கிட்னி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 24 வயது பெண்ணிற்கு பொருத்துவதற்காக சிறுநீரகவியல் தலைவர் குமார், துறை தலைவர் சுதாகர், டாக்டர் ரத்னவேல் காமராஜ், டாக்டர் ஜோதி பிரசாத், முரளிகிருஷ்ணா, உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கழக அலுவலர்கள் தனலட்சுமி, ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் கொண்டு செல்லப்பட்டது.கல்லீரல் கிருமாம்பாக்கம் மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 59 வயது ஆண் நபருக்கு பொருத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டது. இரு கண்கள் தவளக்குப்பம் அரவிந்தர் கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இறந்த வாலிபர் பிரேம்குமாரால், ஏழு பேருக்கு உடல் உறுப்பு தானம் கிடைக்கப் பெற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

3:15 நிமிடத்தில் 7 கி.மீ.,

நேற்று பிற்பகல் 3:45 மணி அளவில், ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் ஒரு பைலட் வாகன உதவியுடன் 7 கி.மீ., துாரத்தை 3:15 நிமிடத்தில் கடந்து ஆம்புலன்சில் ஒரு கிட்னி எடுத்து சென்றனர்.அதேபோன்று சப் இன்ஸ்பெக்டர் இளவரசன் தலைமையில் பைலட் வாகன உதவியுடன் கல்லீரல் ஆம்புலன்ஸில் கிருமாம்பாக்கம் மகாத்மா காந்தி தனியார் மருத்துவமனை கொண்டு சொல்லப்பட்டது கண்கள் இரண்டும் தவளகுப்பம் அரவிந்தர் கண் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது.ஒரு கண்ணை இரண்டு பேருக்கு பொருத்தும் நவீன முறைகள் உள்ளதால் இரண்டு கண்களும் நான்கு பேருக்கு பொருத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.ஆம்புலன்ஸில் உடல் உறுப்புகள் கொண்டு செல்லும் பாதையில் உள்ள சிக்னல்கள் மற்றும் சாலைகளில் போலீசார் நிறுத்தப்பட்டு அதி விரைவாக மருத்துவமனைக்கு உறுப்புகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.மேலும் அவருடைய இதயம் மற்றும் நுரையீரலை கொண்டு செல்வதற்காக ஹைதராபாத் மற்றும் சென்னையில் இருந்து வந்த மருத்துவக் குழுவினர் பிரேம்குமாரின் உறுப்புகள் பொருந்தாததால் அவற்றை எடுக்காமல் திரும்பி சென்ற னர். புதுச்சேரியில் முதல்முறையாக ஏழு பேருக்கு உடல் உறுப்புகள் ஒரே நாளில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி