உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  இயற்கையின் மெல்லிய குரலை உரத்து பேசும் ஓவிய கண்காட்சி

 இயற்கையின் மெல்லிய குரலை உரத்து பேசும் ஓவிய கண்காட்சி

புதுச்சேரி: அரசின் கலைக்கூடத்தில் நடந்து வரும் இயற்கை ஓவிய கண்காட்சி சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கழகத்தின் கூட நுண்கலைப் பிரிவில் ஓவிய விரிவுரையாளராக பணியாற்றி வருபவர் ராஜபெருமாள் 41. இயற்கை மீது தீராத காதலை தன் ஓவியங்களில் ஊற்றி உயிரூட்டி கலைபடைப்புகளாக்கி வருகிறார். இவரது ஓவியக் கண்காட்சி, புதுச்சேரி அருங்காட்சியகத்திற்கு அருகிலுள்ள அரசின் கலைக்கூடத்தில் கடந்த 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகளையும் கலை ஆர்வலர்களையும் ஒருசேர ஈர்த்து வரும் இக்கண்காட்சி, இயற்கையைப் புதிய கோணங்களில் பார்க்கும் வாய்ப்பினை ஏற்படுத்துகிறது. நாம் தினமும் கடந்து போகும், ஆனால் கவனிக்க தவறிய இயற்கையின் நுண்ணிய தருணங்களை ஓவியங்களாக மாற்றியுள்ளது ராஜபெருமாளின் சிறப்பு. இதுகுறித்து ஓவியர் ராஜபெருமாள் கூறுகையில், “மொத்தம் 44 இயற்கை சார்ந்த ஓவியப் படைப்புகளை காட்சிக்கு வைத்துள்ளேன். இவை இயற்கையின் அழகை மட்டுமல்ல, நாம் சாதாரணமாக கவனிக்க தவறியதையும், பாதுகாக்க தவறியதையும் சுட்டிக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்டவை. கூர்ந்து கவனித்தால், நாம் எவ்வளவு பெரிய விஷயங்களைத் தவறவிட்டிருக்கிறோம் என்பது புரியும்” என்றார். கண்காட்சியின் தொடக்க விழாவில், கிரே மோடு நிறுவனத்தின் நிறுவனர் ராஜராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். அவை களம் நிறுவனத்தின் விஸ்வநாதன் ராஜேந்திரன், திருவண்ணாமலையைச் சேர்ந்த எழுத்தாளர் மீரா கந்தப்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்திரா காந்தி தேசிய கலை மையம், புதுச்சேரி மண்டலத்தின் முன்னாள் இயக்குநர் கோபால், விழாவில் வாழ்த்தி பேசினர். இயற்கையை நேசிக்கவும், அதை பாதுகாக்கவும் மனித மனங்களைத் தூண்டும் கலைப்பயணமாக, அமைந்துள்ள இந்தக் கண்காட்சி, வரும் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்கள் கண்காட்சியை காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை